Tuesday, 14 October 2014

அன்னைக்கு என் முதல் பரிசு



முதல் மாத சம்பளம்...


தொலைதூரக் கனவுகளின் தாக்கங்களை சற்றே தளர்த்திவிட்டு

வலைதளத்தில் தேடித் துழாவிக் கொண்டிருந்தேன்

ஒரு சேலையை.


உடனுழைக்கும் அனைவரும் உடனுக்குடன் வாங்கும்

உக்தியை உணர நான் எடுத்த முதல் படி.


எண்ணிலடங்கா தேடல்கள்; என் செலவிலடங்கா விலைகள்;

எண்ணற்ற தேடல்கள்; 

விடை கிடைக்கவில்லை – விடைபெற்று பயணிக்கலானேன்.


அவ்வப்போது செல்லும் ஒரு துணிக்கடையை அடைந்ததும்

ஆடையை உணர்ந்து வாங்கும் உணர்வு சற்று அதிகமே ஊரிற்று.


[கடையின்] பொருளாதாரத்தை பெருக்கும் பெண்கள் பிரிவு;

சலசலக்கும் சத்தத்தில் சிறிது சங்கடத்துடன் சென்றேன்.

  
புதுத்துணிகளின் நேசம், மனிதர்களின் வாசம்;

கடையை அலங்கரிக்கும் ஆடைகளில் அகப்பட்டது – நான்

நாடி வந்த சேலை.

  
புரட்டிப் பார்த்துப் பிடித்தவுடன் பீறிட்டு புறப்பட்டேன்;

சேலை கிடைத்த களிப்பா? இல்லை வேலை கொடுத்த காசா?

இன்னும் விளங்கவில்லை!

விடை பெறாமல் விடை பெற்றேன் வீட்டிற்கு.


பயணித்தேன்...


புதல்வர்களுக்கும் புடவைகளுக்கும் உள்ள பிணைப்பு,

யாரும் அதிகம் அறிந்து உணர்ந்திடாத ஒர் இணைப்பு.


நினைவு தெரியா நாளிலிருந்து உறங்க உரமளித்தது

அவள் சேலை தான்;


குழந்தைப் பருவத்தில் குளித்தவுடன் தலை துவட்டியது

அவள் சேலை தான்;


உணவு உண்டவுடன் கை துடைக்க துணையானது

அவள் சேலை தான்;


மடியில் தலை வைத்து சாய்ந்ததும் – வாசத்தில்

மனவலியை மெல்ல மடித்ததும்

அவள் சேலை தான்.


வேளா வேளைக்கு வேலை செய்த அச்சேலைகளை

அதிகம் கண்டதில்லை அலமாரியில்.


பயணம் முடித்து வீடு சேர்ந்தேன்;

பையைக் கழற்றி சேலையைக் கையில் கொடுத்தேன்.


அன்னையவள் புருவம் உயர்ந்து முகம் பூத்தது;

பிள்ளையிவன் மனம் உருகி கண்ணீர் நிரம்பியது.

அக்டோபர் 11, 2014

3 comments:

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...